Thursday, December 29, 2011

வெள்ளாடு “ஏழைகளின் பசு”



வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப் படுகிறது.  மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
இன்றைக்கு மேய்ச்சல் நிலங்களில் அளவு குறைந்து, பிளாட்டுகளின் எண்ணிக்கை தறுமாறாக அதிகரித்து வருகிறது. முன்பு எல்லாம், பத்து பதினைந்து மாடுகளை வைத்திருந்தவர்கள், இப்போது ஒன்றிரண்டு மாடுகளையாவது வளர்த்து வருகிறார்கள்.
ஆடு வளர்த்தால் நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு மாட்டை வாங்கி வளர்க்க பல ஆயிரம் ரூபாய்க்களை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஆட்டினை வளர்ப்பதற்கு சில ஆயிரங்களே முதலீடு செய்தால் போதும். ஒராண்டிலேயே முதலீடு செய்த தொகைவிட பல மடங்கு லாபம் பார்க்கலாம்
வெள்ளாடுகள் வளர்ப்பது சம்பந்தமாக இன்றைய நிலையைக் கீழ்க்காணுமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
  1. அந்நிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளாட்டு எதிர்ப்புக் கொள்கை இன்னும் முற்றிலுமாக நீங்கவில்லை. எனினும், தற்போது கால்நடைப் பராமரிப்புத் துறைப் பண்ணைகளில், தலைச்சேரி, சமுனாபாரி வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன.
  2. மேய்ச்சல் நிலம் குறைந்து வரும் சூழ்நிலையில், செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வேளையில், வெள்ளாடுகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.
  3. நிலமற்ற ஏழைகள் எல்லா எதிர்ப்பையும் தாண்டி வெள்ளாடுகளை வளர்க்கின்றார்கள்.
  4. சாலை மரங்கள், பொது இடங்களிலுள்ள மரங்கள் தழைக்கு வெட்டப்படுகின்றன.
  5. இன்னும் பல ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு வைத்து வெள்ளாடு வளர்ப்புத் தடை செய்து கொள்கின்றார்கள். ஆனால், யாவருமே வெள்ளாட்டுக் கறியைத்தான் விரும்பிக் கேட்டு உண்பார்கள்.
இச்சூழ்நிலையில் ஏழைகள் பெருமளவில் வளர்க்கும் வெள்ளாடுகள் சிறக்க வேண்டும். அதன் காரணமாக ஏழைகள் வளம் பெற வேண்டும்.
பெருகி வரும் வெள்ளாட்டு இறைச்சித் தேவையை ஈடுகட்டவும், அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதிக அளவில் அறிவியல் அடிப்படையில் முன்னேற்ற முறையில், வெள்ளாடுகள் வளர்க்கப்பட வேண்டும். அதே வேளையில், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும் தழை உற்பத்திக்காக நிறைந்த அளவில் தீவன மரங்கள் எங்கும் நடப்பட வேண்டும். ஆடுகள் வளர்ச்சியால், காடுகள் பாதிக்கப்படாமல் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படும் நிலை ஏற்பட வேண்டும்.
கறவை மாட்டிற்கான பராமரிப்பு செலவை விட, ஆட்டிற்கான பராமரிப்பு செலவு குறைவு.ஆடுகளை வளர்ப்பதற்கு பெரிய அளவில் இடமும் தேவையில்லை. வீட்டிற்கு பக்கத்திலேயே வளர்க்கலாம். பலரும் இப்போது லாபகரமாக வளர்த்து வருகிறார்கள்.
மாட்டு வளர்ப்புக்கு கொஞ்சம் வறட்சியான ஏரியாவில் வளர்ப்பது என்பது கடினம். ஆனால் ஆட்டை வறட்சியான ஏரியாவிலும் நன்கு வளரக்கூடியது. மானாவாரியான நிலம் வைத்திருப்பவர்களும் எளிதாக வளர்க்கலாம். லோனும் கிடைக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளும், பெண்களும் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பை ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டின் காலநிலைக்கு ஆடு வளர்ப்பது அற்புதமான வாய்ப்பு அமைப்பு ஆகும். மேலும், இறைச்சியின் விலையும் அதிகரித்து வருவதால் தொடர்ந்து லாபம் பெறுவதற்கு வாய்ப்பு. விற்பதற்கு சந்தையை நோக்கி ஓட தேவையில்லை. தேவையானவர்கள் உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அந்தளவிற்கு தட்டுபாடு நிலவி வருகிறது.
மாடு வருடத்திற்கு ஒரு முறைத்தான் கன்று போடும். ஆனால் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி போடும். இதில் ஒரு தடவை இரண்டு குட்டி போடும் வகையாக தேர்வு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதுவும் உயர்தர கலப்பின ரகத்தை தேர்ந்தெடுத்தால் ஆறு மாத வளர்ப்பிலேயே நல்ல வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு மூன்று வருடங்கள் வளர்த்தால் பெரிய அளவில் பணம் பார்க்கலாம். மேலும் பெரிய அளவில் ஆடு வளர்க்கும் போது ஆட்டு எருவிற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் அதனை விற்று காசக்கலாம். உங்களிடம் இடமிருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய கொட்டகை போட்டும் வளர்க்கலாம். உங்களிடம் நிலம் இருந்தால்  தீவனங்களையும், புல்களை வளர்த்துக் கொடுத்துக்கலாம்.
தகுந்தமுறையில் வளர்க்கும் போது ஆட்டிற்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இல்லை. ஆடு வளருமிடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வெயில் இருக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கற்றோட்டமான இடம், நல்ல அடர் தீவனம், தேவையான சமயத்தில் உரிய தடுப்பூசிகளையும், குடல்புழு நீக்கமும், ஒட்டுண்ணி நீக்கமும் செய்ய வேண்டும். வயிற்றுபோக்கு, சளி மற்றும் இதர பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வேண்டும்.
வெள்ளாடுகள் விரிகுளம்புகளை உடைய அசைபோடும் விலங்கினம். பழங்காலந்  தொட்டே மனிதனோடு இசைந்து வாழும் விலங்கினங்களில் ஒன்று. சில ஆசிரியர்கள்,  கால்நடைகளில் மனிதனோடு முதலில் தோழமை கொண்டவை வெள்ளாடுகளே  என்கின்றனர். ஆடுகள் எல்லாச் சூழ்நிலையிலும் வாழக் கூடியவை.

Tuesday, December 20, 2011

இறைச்சி, பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்


இறைச்சி உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்
வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற வாய்ப்புள்ளது. வெள்ளாடுகள் விரைவில் எடைகூடும்படி தீவனம் அளிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் வளர்ப்போருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுடன், இறைச்சியும் மிருதுவாக இருக்கும். வெள்ளாட்டுக் குட்டிகளின் வளர்ச்சி வீதம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை அதிகமாக இருக்கும். ஆகவே, 6 மாத வயதில் ஆட்டுக்கடாக்கள் நல்ல எடை கூடும்படி திட்டமிட்டு வளர்ப்பது சிறப்பாக அமையும்.
இறைச்சிக்காகக் குட்டிகள் வளர்க்கும்போது 3 மாதமாவது குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் விட்டுவிடுவது நல்லது. இது சூழ்நிலைக்கேற்றார்போல் மாறுபடும். குட்டிகளைப் பிரித்து வளர்த்து ஒரு நாளைக்கு 3-4 முறை பால் குடிக்க அனுமதிக்கலாம். மேய்ச்சலுக்கு வசதியுள்ள பகுதியில் குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் அனுப்புவதே சிறப்பானதாகும். தாயுடன் செல்லும் குட்டிகளட மேய்ச்சல் நிலத்தில் எவ்வகைத் தாவரங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை அறிந்து கொள்ளும். அத்துடன் அவ்வப்போது தேவையான பாலையும் குடித்துக் கொள்ளும். குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் 2 முதல் 3 மாத வயதிற்குள் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். வெள்ளாடுகள் இறைச்சி உற்பத்தித் திறனில் செம்மறி ஆடுகளை விடக் குறைந்தவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், யாவரும் வெள்ளாட்டு இறைச்சியை விரும்புவதால் இதன் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இத்திறன் குறைவு காரணமாக, வெள்ளாடுகள் உடல் எடையில் 3 – 4% தீவனத்தையே உடல் வளர்ச்சிக்காக ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பால் உற்பத்திக்காக 8% வரை தீவனத்தை ஏற்கின்றன.
பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்
வெள்ளாடுகள் பால் உற்பத்தித் திறன் மிக்கவை. ஒரே அளவு தீவனத்தைக் கொண்டு, வெள்ளாடுகள் பசுக்களைவிட அதிக பால் உற்பத்தி செய்ய வல்லவை. பசுவிற்குத் தீவனத்தைப் பாலாக மாற்றும் திறன் 38% என்றால், வெள்ளாட்டுக்கு 45% முதல் 71% ஆகும். ஆகவேதான் வெள்ளாடுகள் ஏழையின் பசு எனப்படுகிறது. பொதுவாகவே எல்லா வலங்கினங்களிலும் பால் உற்பத்தி மிகத் திறனுடையதாகும். உடல் வளர்ச்சிக்கு அதிகத் தீவனத்தை உண்ண முடியாத வெள்ளாடுகள் பால் உற்பத்திக்கு உடல் எடையில் 8% வரை தீவனம் உண்ணப் கூடியவை. இந்த அளவை ஏற்க ஏதுவாக அகன்ற பெருவயிறு உள்ளது.
நமது நாட்டு இன ஆடுகள் வழங்கும் பாலளவு
இனம்பாலளவு
(கிலோ)
தினம் அளிக்கும்
பாலளவு (கிலோ)
பால் கொடுக்கும்
நாள்கள்
பார்பாரி156 – 228 1.6180 – 252
பீட்டல்140 – 2281.2208
சமுனாபாரி 200 – 5621.5 – 3.5170 – 200
தலைச்சேரி100 – 2001.0189 – 210
சானன் 2411.4 – 3.6  -
வெள்ளாடுகள் கலப்புத் தீவனம் இன்றியே தரமான தழை உண்டு முழு அளவு பால் வழங்கக் கூடியவை. எனினும், நமது நாட்டுச் சூழ்நிலையில் உயர்ந்த தழை எப்போதும் கிடைக்காததால், கலப்புத் தீவனம் இன்றியமையாதது. இதனால் குட்டிகளுக்குத் தேவையான பால் கடைப்பதுடன், சிறிதளவு விற்பனைக்கும் பால் கறந்து கொள்ள முடியும். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 300 – 400 கிராம் கலப்புத் தீவனம் தேவை.
ஆடுகளுக்குச் சினையான கடைசி ஓரிரு மாதங்களில் 300 – 400 கிராம் கலப்பும் தீவனம் அளிப்பது அவை நன்கு பால் கொடுக்கவும் குட்டிகளின் வளர்ச்சிக்கும், உதவியாக இருக்கும்.

Saturday, December 17, 2011

கூடுதல் லாபத்திற்கு- ஆடு வளர்ப்பு


ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் உப தொழிலாக ஆடு வளர்ப்பது கூடுதல் லாபம் ஈட்டித்தரும் என்று தஞ்சாவூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என். புண்ணியமூர்த்தி கூறினார்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாமில், புண்ணியமூர்த்தி பேசுகையில், நாட்டு இன ஆடுகளான குறும்பைசேலம் கருப்புகன்னி போன்ற ஆட்டினங்களை இறைச்சிக்காக வளர்க்கலாம். ராஜபாளையம் பகுதியில் கன்னி ஆடு இனங்கள் அதிகம் உள்ளது.

வேலி தாண்டாத வெள்ளாடு வளர்ப்புதான் உகந்தது. இதற்கு கொட்டில் ஆடு வளர்ப்பு முறை என்று பெயர். சில கிராமங்களில் கால்நடைகளை அவிழ்த்துவிடக் கூடாதென கண்டிப்பு இருக்கிறது. அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்து சேதம் விளைவிக்காத வகையில் இருக்க கொட்டில் ஆடு வளர்ப்பு முறையே உகந்தது.

இதற்கு பசுந்தீவன உற்பத்தி முக்கியமானது. புல்செடிகொடிஇலைகள் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்த பின்னர்தான் கொட்டில் ஆடு வளர்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்.

ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்தால், 25 ஆடுகள் வரை வளர்க்கலாம். இவை இனவிருத்தி செய்து எண்ணிக்கை அதிகரிக்கும் போதுவளர்ந்த ஆடுகளை இறைச்சிக்காக விற்கத் தொடங்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் கொட்டில் ஆடு வளர்ப்பு முறையை பின்பற்றினால்ஆடுகளின் எருபுளுக்கை போன்றவை, விவசாய எருவாக உதவும்.

ஆடுகளை வெளியில் மேயவிடாமல் பாதுகாப்பாக பண்ணை விவசாயத்தில் கொட்டில் முறையை பின்பற்றி வளர்த்தால் அதன் மூலம் பல்வேறு வகைகளிலும் விவசாயத்திற்காக நன்மையும்கூடுதல் வருவாயும் கிடைக்கும்.

Tuesday, December 13, 2011

நச்சுத் தாவரங்கள்


பயனுள்ள பசுந்தழைகள் குறித்து எழுதும்போது, நச்சுத் தாவரங்கள் சில குறித்தும் தெரிவிப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
அரளி (Nerium oleander)
தமிழ்நாடு எங்கும் உள்ள இது மிகக் கொடிய நச்சுத் தாவரம். ஆனால் பல வண்ணங்களில் பூக்கும் பல வகைகள் உண்டு. அடுக்கு அரளி, ரோசாப்பூ போன்று அழகாகப் பூக்கும். பலர் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பார்கள். ஆனால் அரளி எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்றால் 5 கிராம் காய்ந்த தழை ஒரு மாட்டையே கொல்லவல்லது.
அரளியை ஆடு சாப்பிடுமா? சாப்பிடவே சாப்பிடாது. அப்படியானால் அரளியினால் ஆபத்து இல்லையே! உண்மையில் அரளியால் ஆடுகளுக்கு ஆபத்து சுற்று வழியில் ஏற்படும்.
அரளிகள் அவ்வப்போது வெட்டி விடப்படும்போது அதன் இலைகள் காய்ந்து நிலத்தில் விழும். கோடைக் காலங்களில் காய்ந்த அரளி இலைகள், பிற காய்ந்த தீவனத் தழையுடன் கலந்து விடும்போது ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சில பண்ணைகளில் காரணம் தெரியாது ஏற்படும் இறப்புகளுக்கு அரளி இலைகளே காரணமாக அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையி எனது செய்தி என்னவென்றால், ஆடு, மாடு வளர்ப்போர் வீட்டில் அரளிச்செடி இருக்கலாகாது.
பாலச்செத்தை (Puscilla spp)
திருச்சி, திண்டுக்கல், பெரியார் மாவட்டப் பகுதிகளில் மழைக் காலத்தில் மேய்ச்சல் தரையில் முறைத்து வளரும் நச்சுத் தாவரமாகும்.
இது ஆடு மாடுகளில் கழிச்சல் மற்றும் நரம்புச் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தாவரத்தை மேய்ந்து பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்து அவற்றைக் குணப்படுத்த முடியும் என்றாலும், மேய்ச்சல் நிலங்களிலிருந்து இச்செடிகளை அகற்றுவதே சிறந்தது. மேலும், மேய்ச்சல் தரையில் இதன் வளர்ச்சி அதிகமாக இருந்தால் அப்பகுதிக்கு ஆடுகளை மேய விடுவதைத் தவிர்ப்பதே ஏற்ற நல்ல முறையாகும்.
லாண்டனா (Lantana camera)
இச்செடி மண் அரிப்பைத் தவிர்க்கவும், ஓர் அலங்காரச் செடியாகவும் கொண்டு வரப்பட்டதாகும். தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும், மற்றப் பகுதிகளிலும் கூட இவை வளர்ந்திருப்பதைக் காணலாம். இச்செடிகளில் சிறு முட்கள் இருக்கும். மஞ்சள், சிவப்பு, வெள்ளை மலர்கள் சிறு செண்டு போல் அழகிய தோற்றத்துடன் காணப்படும்.
வறட்சிக் காலங்களில் ஆடுகள் இத்தழையை உண்டு பாதிப்பிற்குள்ளாகும். இதனால் ஆடுகள், தோல் சொறியினால் (Photo Sensetization) பாதிக்கப்படுவதுடன், கடுமையாகக் குடல் உறுப்புகளும் தாக்கப்படும். வயிறு மற்றும் குடல் நரம்புகள் பாதிக்கப்பட்டுச் செரிமானத்தைப் பாதிக்கும். தொடர்ந்து இத்தழையை மேய்ந்தால் இறப்பு ஏற்படும்.  ஆடு, மாடுகள் இத்தழையை மேயாமல் தடுப்பதே சிறந்தது.
நெய்வேலி காட்டாமணக்கு/காட்டாமணி (Ipomoea carenea)
இது எக்காளச்செடி எனவும் அழைக்கப்படும். பெரிய ஊதா நிறம் கலந்த வெள்ளைப்பூக்களுடனும், பெரிய இலைகளுடனும் காணப்படும். அழகுக்கென்றும், பசுந்தாள் உரத்திற்கு என்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செடி பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. இது ஏற்படுத்தும் பெரும் பிரச்சனைகளைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணலாம். வாய்க்கால்களைப் பெரும் அளவில் மூடி நீரோட்டத்தைத் தடுக்கிறது. ஆடுகளுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
சில ஆடுகள் இத்தழையை உண்பதில்லை. ஆனால், சில ஆடுகள் தாராளமாக மேய்ந்துவிடும். சிறப்பாகப் புதிதாகத் தஞ்சைப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் ஆடுகள் முழுவதுமாக இத்தழையை மேய்ந்து மாண்டு போகும்.
முன்பு தஞ்சையில் தலைச்சேரி, சமுனாபாரி இனக்கடா ஆடுகளை அவ்வூர் மக்கள் வாங்கிய சூழ்நிலையில் அவை பல இறந்துவிட நேர்ந்தது.
இத்தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் இரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப் பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப் பொருளும் உண்டு. இதனால் இத்தழையை அதிக அளவில் ஏற்கும் வெள்ளாடுகள் இறந்துவிடும். சிறிய அளவில் மேய்ந்துவிடும் ஆடுகளுக்குச் சிகிச்சை அளித்துக் குணமாக்கலாம்.
இத்தழை உள்ள பகுதிகளில் மேய அனுமதிக்காமல் இருப்பதே சிறந்த பாதுகாப்பு முறையாகும். முக்கியமாகப் புதிதாக வாங்கிய வெள்ளாடுகளைப் பொருத்த மட்டில் மிகக் கவனம் தேவை.

Monday, December 5, 2011

ஹை-டெக் சிட்டி ஐதராபாத்தில் ஆட்டு பண்ணை அதிகரிப்பு

சாப்ட்வேர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நகரான ஐதராபாத்தில் தற்போது ஆட்டு பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. ஆந்திராவின் ஐதராபாத் நகரில் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளின் அபரிமிதமான வளர்ச்சியால் உயர் தொழில்நுட்பம் நிறைந்த நகராக உருவாகியுள்ளது. இந்நகரில் நிறுவனங்களின் பெருக்கத்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன. 

பூர்வீகமாக குடியிருந்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்காமல், அப்பகுதியில் ஆட்டு பண்ணைகளை அதிகமாக அமைத்து வருகின்றனர். ஐதராபாத்தில் சாப்ட்வேர் துறை வளர்ச்சியடைந்து வரும் அதேவேளையில் மாதாபூர் பகுதியில் தற்போது 30க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆட்டு பண்ணைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நகரம் விரிவடைந்து வருவதால் தங்களின் பூர்வீக பகுதிகளில் இருந்து வெளியேறவோ, நிலங்களை விற்கவோ மாட்டோம். தொன்று தொட்டு கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் வரும் காலத்தில் இங்கிருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை என்று ஆட்டு பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களில் மதிப்பு ராக்கெட் வேகத் தில் உயர்ந்தாலும் நிலங் களை விற்க பெரும்பான்மையினர் முன்வரவில்லை.  சிலர் நிலங்களை விற்கவும் செய்கின்றனர்.