Wednesday, June 15, 2011

புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்


வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
  1. கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும். பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள். தற்போது கோ-2 ரக புல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 33% அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.சாகுபடிக் குறிப்புகள்
    எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும். 150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம். மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
    நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
    இப்புல்லுக்கு இடையே ஊடுபயிராக மொச்சையினச் செடிகளையும் பயிரிடலாம்.

  2. கினிபுல் – அமில்வகை (Guinea Grass – Hamil)இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம். எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.

  3. எருமைப்புல் (Para Grass)இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும். உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
    முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.
மொச்சையினப் பயிர்கள்
  1. குதிரை மசால் (Lucerne)இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம்.
    வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.
    70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.

  2. ஸ்டைலோ (Stylosanthes)இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
    முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
    ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.

  3. வேலிமசால் (Hedge Lucerne)இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும்.
    இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
    இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
    இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
    ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.
வெள்ளாடுகளுக்கென்றே உள்ள சிறந்த தீவன மரங்களாவன:
  1. கொடுக்காய்புளி
  2. கருவேல்
  3. வெள்வேல்
  4. உடை (குடைவேல்)
  5. கிளுவை
கொடுக்காய்புளி மரப் பழங்களைப் பலர் விரும்பி உண்பார்கள். அதன் தழைகளில் முள் இருந்தாலும், வெள்ளாடுகள் விரும்பி, ஏன் முள்ளையும் சேர்த்தே உண்டுவிடும்.
கருவேல், வெள்வேல், குடைவேல் முதலான மரங்கள் விறகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதன் தழையையும், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அத்துடன் இம்மர நெற்றுகள் ஆடுகளுக்குச் சிறந்த தீவனமாகும். பலர் இந்நெற்றுகளைச் சேமித்துத் தீவனப் பற்றாக்குறைக் காலங்களில், ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். இதில் புரதம் நிறைய உள்ளது. சீமைக் கருவேல் நெற்றுத் தீவனமாகும்.
மேலும் கிளுவை மரங்களை வேலிகளில் வளர்ப்பார்கள். இதன் தழையையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகள் அவை வளர்க்கப்படும் பகுதியில் உள்ள பல்வகைத் தழைகளை உண்ணப் பழகிக் கொள்ளும். உதாரணமாகச் சவுக்குப் பயிரிடப்படும் பகுதியில் சவுக்குத் தழையை உண்ணும். மைகொன்னை எனப்படும் மரத்தழையையும், சில வெள்ளாடுகள் உண்கின்றன.

Thursday, June 9, 2011

அதிக லாபம் தரும் "பரண்மேல்' ஆடு வளர்ப்பு!


 தளச்சேரி ஆடு என்னும் பரண்மேல் ஆடு வளர்ப்பு முறைக்கு விவசாயிகள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டு ஆடு வளர்ப்பைவிட பரண்மேல் ஆடு வளர்ப்பு முறை மூலமாக கூடுதல் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
 கேரள மாநிலத்தில் உள்ள தளச்சேரி பகுதியில் இந்த ஆடு வகை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது பரண்மேல் ஆடு வளர்ப்பு முறை பரவலாக அறியப்பட்டு விவசாயிகள் ஆடு வளர்த்தலில் இந்த முறையைக் கையாண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தமிழக பருவ நிலைக்கும் சூழலுக்கும் நல்ல முறையில் வளரும் இயல்புடையது என தெரிவிக்கின்றனர்.
 ஒரு விவசாயி குறைந்தபட்சம் 20 ஆடுகள் வளர்ப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். 20 பெண் ஆடுகளுக்கு 1 கிடா வீதம் இருக்க வேண்டும் எனவும், தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 கிடா இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். பரண்மேல் வளர்க்கும் இந்த ஆடுகள் 6 மாதத்தில் சுமார் 18 முதல் 20 கிலோ எடை அளவு வளரும் தன்மைக் கொண்டது.
 இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் தெரிவித்தது: ÷பரண்மேல் ஆடு வளர்ப்பு முறை விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் வகையில் உள்ளது. பால், இறைச்சிக்காக இந்த ஆடுகள் பயன்படுகின்றன. நாட்டுவகை ஆடுகள் ஒரு ஆண்டுக்கு 1 அல்லது 2 குட்டிகள் மட்டுமே ஈனும் இயல்புடையது.
 ஆனால் பரண்மேல் வளரும் தளச்சேரி ஆடுகள் முதல்முறையாக குட்டி ஈனும்போது 1 குட்டியும், அடுத்தடுத்து 2 அல்லது அதற்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும் தன்மையையும், 2 ஆண்டு இடைவெளியில் 3 முறை குட்டிகளை பெறும் இயல்புடையதாகும்.
 பரண்மேல் ஆடு வளர்ப்பதற்கு அதிக இடம் தேவையில்லை. ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரண் அமைத்தால் போதுமானது. பரண்மேல் ஆடு இருப்பதால் ஆட்டுப் புழுக்கை, சிறுநீர் ஆகியன பரணுக்கு கீழே விழுகிறது. இதனால் வாரத்து ஒரு முறை அல்லது இரண்டுமுறை ஆட்டின் கழிவுகளை அகற்றலாம். இவ்வாறு வாரத்துக்கு 1 அல்லது 2 முறை கழிவுகளை அகற்றுவதால் அவற்றை சேகரித்து விளைநிலங்களுக்கு உரமாக பயன்படுத்த எளிமையாக இருக்கும்.
 இதுபோன்ற முறையில் வளர்க்கப்படுவதால், ஆடுகள் நல்ல சுகாதாரத்துடன் காணப்படுகிறது. மேலும், தற்போது பின்பற்றப்படும் ஆடு வளர்ப்பில் மேய்ச்சலுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால், ஆடுகள் தன் ஆற்றல், சக்தியை இழக்கும் நிலையுள்ளது. அதிக அளவில் எடை இல்லாமல் இருக்கும். ÷ஆனால் பரண்மேல் வளர்த்தலில் ஆடுகள் ஒரே இடத்தில் இருப்பதால், ஆட்டின் ஆற்றல் வீணாகாமல் எடை அதிக அளவில் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வகை ஆடுகளுக்கு நாட்டு ஆடுகள் உண்ணும் புல் வகையே போதுமானது. மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த ஆடுகளை எளிமையாக வளர்த்து விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என தெரிவித்தார்.
 பரண்மேல் வளர்ப்பு ஆடு கிடைக்கும் இடம்: திருச்சியிலுள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்லில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், சின்னசேலம் வி.கூட்டு சாலையில் உள்ள தமிழக அரசு ஆட்டுப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் என்றார்.

Monday, June 6, 2011

பண்ணைக்காரன்



ஆடு இருவகைப்படும் , !) வெள்ளாடு 2)செம்மறியாடு
தமிழ் நாட்டில் காணப்படும் வெள்ளாட்டினங்கள்
கன்னி ஆடுகள், கொடிஆடுகள், சேலம்கறுப்பு, பள்ளையாடுகள்।
நம் நாட்டின் மற்ற இடங்களில் காணப்படும் மற்ற இனங்கள்:
ஜமூனாபாரி, பீட்டல், சரோகி, காஷ்மீரி, பார்பாரி, சுர்த்தி, ஓஸ்மானாபடி, தலைச்சேரி (மலபாரி), மார்வாரி, பாஸ்மினா, ஜக்ரனா, வங்காளக் கறுப்பு, சிரேஹி, ஜலவாடி, கோஹல்வாடி, மேசனா, ஆஸ்மானபடி, குட்சி, சங்கம்னரி, கட்டி, ஷேகு, சந்தங்கி முதலியன.
வெளிநாட்டி்ல் காணப்படும் இனங்கள்:
அங்கோரா, ஆலீபைன், ஆங்கிலோ நூபியன், போயர், சானன், டோகன்பர்க், சீன நீலம்,முதலியன।

1)கன்னி ஆடுகள்: இவை பெரும்பாலும் தென் மாவட்டங்களில் காணப்படுகின்றன।குறிப்பாக சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திக்குளம், இராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாகவும், குறிப்பாக கரிசல் நிலம், குன்றுகள் நிறைந்த பகுதிகளில் நிறைவாக காணப்படுகின்றன। இந்த ஆட்டினத்தை இன காண்பது எளிது, முகத்தில் வெண்மை கோடு அல்லது செங்கோடு வயிற்று பகுதியில் வெண்மையாகவோ, அல்லது செந்நிறமாகவோ காணப்படும்। முகத்தில் வெண்மைக்கோடு கொண்டுள்ள ஆடு பால் கன்னி என்றும், செந்நிறக்கோடு கொண்டுள்ள ஆடு செங்கன்னி என்றும் அழைக்கப்படும்। கன்னி கிடாஆடுகள் 85 செ।மி। உயரம் 75 நீளம் இருக்கும்। சராசரியாக 50 கிலோ உடல் எடை இருக்கும்। பெண் ஆடுகள் 80 செ।மி.உயரம், 60।செ।மி.நீளம் சராசரியாக 35 கிலோ உடல் எடை கொண்டதாகக் காணப்படும்। வறட்சி பகுதியில் வாழ வல்லமை பெற்றவை।இவ்வகை ஆடுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் அரிதாக நான்கு, ஐந்து குட்டிகள் கூட ஈனும்।

கொடி ஆடுகள்:
மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்। இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு।நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும்। ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும்। வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும்।100செ।மீ உயரம், 85செ।மீ நீளமிருக்கும் கிடாக்களின் எடை40கிலோ இருந்து75 கிலோ வரை இருக்கும்। பெண் ஆடுகள் 80செமீ உயரம், 70செமீ நீளம் இருக்கும்।சராசரி எடை 35கிலோ இருக்கும்।வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும்। மிக அரிதாக முன்று குட்டிகள் ஈனும்।
இந்த வகை ஆடுகள் தென் மாவட்டங்களில் காணப்படும்।குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்।உயரமான கால்களை கொண்டிருப்பதால் நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லலாம்।உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும்।இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன।மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன।
எந்த வகையிலும் கலப்பு செய்யப்படாத கொடி ஆடுகள் எட்டயபுரம், கோவில்பட்டி, புதூர், வேம்பாறு, நாகலாபுரம் பகுதிகளில் கிடைக்கும்। இந்த பகுதிகளில் காணப்படும் 90சதவிகிதம் வெள்ளாடுகள் கொடிஆடுகள் எனப்படும் போரை ஆடுகள்தான்।
வறட்சியை தாங்கி வளரக்கூடியது। வறட்சி மிக்கப் பகுதிகளில் சிரு மரங்கள் குத்துச் செடிகளின் மேல் முன்காலைத் தூக்கிப் போட்டு நிமிர்ந்து மேயும் போது, 7அடி உயரத்திலுள்ள த்ழையையும் தாவிப் பிடித்துவிடும்।வறட்சியின் காரண்மாகத் தரையில் தீவனம் இல்லாத சூழ்நிலையில் மரத்தின் இலை தழைகளை தீவனமாக் கொள்ளவே உயரமான கால்களும், நீண்ட கழுத்தும் இதற்கு உள்ளது।

சேலம் கறுப்பு:

இந்த வகை ஆடுகள் இன்னமும் காட்டுத் தன்மை போகாமல் இருக்கிறன। காட்டில் கூட்டமாக அலைந்து திரிந்து மேயவே ஏற்றவை। எந்த வகை ஆடுகளை வரை ஆடுகள் எனவும் குறிப்பிடுவார்கள்।எப்பொழுதும் 10முதல் 30ஆடுகள் என மந்தையகவே இருக்க விரும்பும்। பெயருக்கு ஏற்றது போல் உடல் முழுதும் கறுமை நிறம் கொண்டதாக இருக்கும்।கருமை நிறகொண்ட எல்ல ஆடுகளும் சேலம் கறுப்பாடு என கருதிவிட கூடாது। மெலிந்த உடலமைப்புக் கொண்டது।கொம்புகள் பின் நோக்கி வளைந்து இருக்கும்।இவ்வகை ஆடுகள் சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன।வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளிலும் அதனை ஒட்டிய மலை பகுதியிலும், திருவண்ணாமலை பகுதிலும் காணப்படுகின்றன।பொதுவாக ஒரு குட்டிதான் ஈனும், அரிதாக இரண்டு குட்டி ஈனும்।

பள்ளை ஆடு:
இதை சீனி ஆடு எனவும் அழைப்பதுண்டு। இவை மிக குட்டையான சிறிய இனம்। குட்டையான கால்களும், அகன்ற உடலமைப்பும் கொண்டவை। இந்த இன ஆடுகளுக்கு தனிப்பட்ட நிறம் கிடையாது। எல்லா நிறங்களிலும் காணப்படும்।குறிப்பாக கறுப்பு நிறத்திலும் அதனைச் சார்ந்த புள்ளி நிறத்திலும் காணப்படும்।இந்த வகை ஆடுகள் அதிக எண்ணிக்கையில் குட்டி ஈனும் ।ஓரே ஈத்தில் ஆறு, ஏழு குட்டிகள் கூட ஈனும்।பல ஈத்து ஆடுதான் பள்ளையாடு என்று அழைக்கப்பாடுவதாக கூறுவதுமுண்டு।

மேற்குறிபிட்ட நான்கு வகை ஆடுகள்தான் தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய வெள்ளாட்டினமாகும்.