Thursday, July 19, 2012

இலாபம் கொழிக்கும் ஆடு வளர்ப்பு


மனிதன் முதன் முதலில் வீடுகளில் வளர்க்கத் துவங்கிய பிராணி ஆடு ஆகும். இது ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது. 

ஏனென்றால் ஆட்டின் இறைச்சி மிருதுவானதாகவும், குறைவான கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. எனவே இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆட்டிறைச்சியின் விலை உயர்வாக இருந்தாலும் அதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.பண்ணை அமைத்து தீனி போட்டு வளர்த்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

ஆடுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இரண்டிரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ குட்டிகளை ஈனும் தன்மை படைத்தவை.
ஆடுகளை வாங்கி பண்ணைகளை அமைப்பதற்கு குறைவான முதலீடு போதுமானதாகும். ஒரு கலப்பின மாடு வாங்குவதற்கு தேவையான தொகையைக் கொண்டு தரமான 10 ஆடுகளை வாங்கிவிடமுடியும்.

ஆடுகளையும், அதன் குட்டிகளையும் எந்த நேரத்திலும் விற்று பணமாக மாற்றிவிட முடியும். அவைகள் நம்மிடமுள்ள (BLANK CHEQUES) வெற்று காசோலைகளைப் போல.

ஆடுகள் குறுகிய கர்ப்ப காலம் கொண்டவை. (குறுகிய கருத்தங்கல் காலம்)

நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறைவு. பண்ணை உணவு முறையைக் கொண்டுள்ளதால் மருத்துவத்திற்கும், மருந்திற்கும் மிகக் குறைவாகவே செலவாகும்.

60 சதவீத ஆடுகள் ஆண்டு தோறும் அறுக்கப்படுகிறது. இருந்தாலும் அதன் இனப்பெருக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இறைச்சி, பால், உரம், தோல் & பளபளக்கும் மிருதுவான முடி போன்றவைகளுக்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

உயிருள்ள ஆடுகள், அறுக்கப்பட்ட ஆடுகள், ஆட்டிறைச்சி, தோல் போன்றவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் நிலங்கள் தரிசாக மாறிப்போகின்றன. நகரங்களும், கிராமங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. எனவே பண்ணைகளை அமைத்து ஆடுகளை இனப்பெருக்கம் செய்யவேண்டியதன் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆடுகள் உயிர் வாழும் காலம் = 15 ஆண்டுகள். வாழ்வில் இனப்பெருக்கம் செய்வதில் கழியும் மொத்த காலம் = 7 ஆண்டுகள். கர்ப்ப காலம் {மொத்தம் = 150 நாட்கள்}+/- 2 நாட்கள்.

முதிர்ச்சியடைந்த ஒரு ஆடு ஒரு நாளில் வெளியேற்றும் உரம் = 1 KG.

முறையான பராமரிப்பின் மூலம் இறப்பு விகிதத்தை  3 சதவீதமாக குறைக்க முடியும். நோயிலிருந்து காக்கவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவும் சரியான காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய ஆட்டிறைச்சி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது.

ஆட்டுப்பண்ணை வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த விவசாயம்:
பண்ணையில் தீவனம் உண்ணும் ஆடுகள் "செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முறை (Intensive Integrated Farming System - IIFS)"யின் கீழ் வருகின்றன. ஆடு போன்ற சிறிய பிராணிகளைக்கொண்டு சிரமமின்றி பண்ணைகளை பராமரிக்க முடியும். அவைகள் பயிர்களின் எச்சங்களை உண்டு தரமான இயற்கை உரங்களை வெளியேற்றுகின்றன. ஏராளமான விவசாயிகள் ஆட்டுப் பண்ணைகள் அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முயற்சி வளம் கொழிக்கும் இலாபகரமான தொழிலாகும்.

ஆடுகள் சத்தான தானியங்களின் எச்சங்களையும், தாவரங்களின் தண்டுகளையும் விரும்பி உண்கின்றன. அதிலும் குறிப்பாக, அவைகளை புல் போன்ற பசுமையான தீவனங்களுடன் கலந்து கொடுத்தால் அதன் உண்ணும்கம்பு மற்றும் புண்ணாக்கு கலந்து தயாரிக்கப்படுகிறது. தீவனத்திற்கு ஆகும் செலவு மற்றும் ஆடிடையன் (பணியாள்) மேய்ப்பு, தீவனமிடுதல், அது சார்ந்த பிற வேலைகளையும் கவனித்துக் கொள்வதால் ஆடு வளர்ப்பின் அசல் தொகை மிகக் குறைவாகும். ஆட்டின் வளமான உரம் (கழிவு) மீன் பண்ணைகளுக்கும், மற்ற விவசாயப் பயிர்களுக்கும் மிகச் சிறந்ததாகும். மண்புழு உரம் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். சிறப்பு ஆட்டுத் தீவனங்கள் 

பால்பண்ணை அமைப்பதற்கு ஆகும் முதலீட்டை விட  குறைவான முதலீடு ஆட்டுப் பண்ணைக்கு போதுமானதாகும். சிறிய பண்ணை அமைத்து ஆடுகளை பராமரிக்க முடியும். ஒரு முதிர்ந்த ஆட்டுக்கு ஒரு சதுர மீட்டர் இடம் போதுமானதாகும். விவசாய நிலம் இல்லாதவர்களும், சிறு மற்றும் குறுந்தொழில் மட்டுமே செய்ய முடியும் என்று நினைப்பவர்களும் இதனை தாராளமாக தொடங்கலாம். முறையான தீனியும், பராமரிப்பும் உள்ள பால் கறக்கும் ஆட்டிலிருந்து தினமும் தோராயமாக 2 லிட்டர் வரை பால் தரும். இது குறைவான பால் தரும் ஒரு நாட்டுப்பசுவிற்கு சமமாகும். பெண் ஆடு ஒவ்வொரு முறை குட்டிகளை ஈனும் பொழுதும் 2-4 குட்டிகளை ஈனும். (கருத்தங்கள் காலம் குறைவான 150 நாட்கள் மட்டுமே)

சாணென், டோக்கன்பர்க், அங்கோரா, ஆங்கிலோ-நுபியன், பிரிட்டிஷ்-அல்பைன், பிரென்ச் -அல்பைன் போன்ற வெளிநாட்டு ரகங்கள் இந்திய சீதோஷ்ன நிலைக்கு உகந்தவை. இவைகளுடன் உயர் ரக இந்திய ஆடுகளின் மூலம் கலப்பினப் பெருக்க முறையில் புதிய ரகங்களை உருவாக்க முடியும். சிரோஹி, ஜம்னாபாரி, சுர்டி, தெல்லிச்சேரி, பீட்டல், மலபாரி, பார்பாரி, குஜராத்தி போன்றவைகள் புகழ் பெற்ற இந்திய ரகங்களாகும். கறவை ரகங்கள் பண்ணை முறைக்கு சிறந்தவையாகும்.

ஒரு சிறிய பண்ணை அமைப்பதற்கு நல்ல காற்றோட்டமுள்ள ஒரு சிறிய கொட்டகை (Shed) போதுமானதாகும். நெல்லின் உமியும், நிலக்கடலையின் ஓடுகளையும் கலந்து பரப்பிவைத்த தரை பரப்பு ஆடு வளர்ப்புக்கு உகந்தது. இக்கலவையின் உயிரியல் செயல்பாடு கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் மித வெப்பமாகவும் தரைப் பரப்பை வைத்திருக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இக்கலவையை மாற்றினால் போதும்.

தரைக் கலவையை தினமும் கிளறி விடுவதால் துர்நாற்றத்தை போக்க முடியும்.

தரைக் கலவையில் சாணமும், மூத்திரமும் நன்கு கலந்து செறிவூட்டப்பட்ட இயற்கை உரமாக மாறும். முதிர்ந்த ஆடுகளின் வருடம் கூட கூட சாணத்தின் தரமும் கூடும்.

ஆடு ஆரோக்கியமான பிராணியாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதாக இருந்தாலும் பாதங்களிலும், வாயிலும் நோய் தோற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். வருடத்திற்கு இரு முறை வயிற்றுப் புழு வராமலிருக்கவும், ஆரோக்கியத்தை காக்கவும் வேப்பிலையை அரைத்துக் கொடுக்க வேண்டும்.

ஆட்டுப்பன்னையை கோழிப்பண்ணையை பராமரிப்பது போன்று எளிதாக பராமரிக்கலாம். இது சிக்கனமானது. வருமானம் கொழிக்கும் தொழிலாகும்.

தண்ணீர் ஆட்டிற்கு விலை மலிவான உணவாகும். ஆனால் பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை. இது தவறாகும்.

Wednesday, July 11, 2012

இனவருத்தித் திட்டங்கள்


உள்இனச்சேர்க்கை (In Breeding)
மிக நெருங்கிய உறவு நிலையில், இனச் சேர்க்கை செய்வதாகும். இத்திட்டத்தின் மூலும் பர அடிப்படை ஆய்வுகள் மற்றும் உறவுள்ள குடும்பங்கள், புது இனங்கள் தோற்றுவுக்க உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. உயர்வினங்களில், புது இனங்கள் தோற்றுவிக்கப்படும்போது மட்டுமே ஆரம்பக் கட்டங்களில் உள் இனச் சேர்க்கை முறை கையாளப்படுகின்றது. ஆனால், கோழிகளில் கலப்பினக் குஞ்சுகள் உற்பத்திக்கும், ஆய்வுக்கூட எலிகள் , கினி, பன்றிகள், முயல் போன்றவை ஒரே மாதிரியாக இருப்பதற்காகவும் உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. சாதாரணப் பண்ணையாளர்கள் இந்த இனச் சேர்க்கை முறையைப் பின்பற்றலாகாது. இம்முறையில் குட்டிகளுக்கிடையேயும், குட்டிகள் அதன் தந்தை (Sire) -க்குமிடையேயும், தொடர்ந்து இனச் சேர்க்கை செய்து தேர்வு முறையில் நல் இனம் தோற்றுவிக்கப்படும்.
வெளி இனச் சேர்க்கை (Out Breeding)
இவ்வினச் சேர்க்கை முறையே சாதாரணப் பண்ணையாளர்கள் பின்பற்ற வேண்டியதாகும். பல வெள்ளாட்டுப் பண்ணையாளர்கள் ஒன்று அல்லது இரண்டு வெள்ளாட்டுக் கடாவைத் தொடர்ந்து இனவிருத்திக்குப் பயன்படுத்துவார்கள். இது பெரும் தீங்கை ஏற்படுத்திவிடும். வளர்ச்சி வீதம் குறைபடுதல், பால் உற்பத்தி குறைவு. இனவிருத்திப் பாதிப்பு ஆகிய கேடுகள் ஆடுகளைப் பாதிக்கும்.
பண்ணையில் உள் இனச் சேர்க்கையால் கேடுகள் வராமல் தவிர்ப்பது எப்படி
பண்ணையில் பொலி கடாக்களை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். பண்ணையாளர்கள் தங்களுக்கிடையே கடாக்களை மாற்றம் செய்து கொள்ளலாம். கடாவை அதனால் பிறந்த குட்டிகளுடன் இனச் சேர்க்கை செய்யக் கூடாது. அவ்வாறே பிறந்த குட்டிகளுக்கிடையேயும் இனவிருத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது.
ஓரிரு ஆடுகள் வைத்திருப்பவர்கள், பொலிகடா பராமரிப்பு கடினமானதாகும். இனவிருத்தியில் செயற்கை முறைக் கருவூட்டல் பல சிக்கல்களைத் தீர்க்கும்.
வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் 
பல வெளிநாடுகளில், வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. நமது நாட்டில், மாடுகளில் செயற்கை முறை
இனவிருத்தி மிக நல்ல முறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகின்றது. அவ்வாறே உறைவிந்து மூலமும் கருவூட்டல் சிறப்பாக நடந்து வருகின்றது. வெள்ளாடுகளில் ஏன் இந்தச் சுணக்கம்? வெள்ளபட்டுக் கடா விந்து, விந்து கலக்கும் திரவத்துடன் பயன்படுத்தும் முட்டையின் மஞ்சள் கருவுடன் செயல்பட்டு, திரிந்து விடுகின்றது. ஆகவே, விந்து அணக்களை விந்தின் திரவத்திலிருந்தி பிரித்து அதன் பின் முட்டை மஞ்சள் மற்றும் திரவம், கிளிசரால் சேர்த்து மாட்டு விந்தைப் போல் உறை நிலையில் சேமிக்கும் நடைமுறை நமது நாட்டிற்கும் வந்துவிட்டது. பெய்ப் நிறுவனத்தில் இப்பணி நடைபெற்று வருவதைப் பார்த்துள்ளேன். செயன்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இப்பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் கருவூட்டல் நடைமுறைக்கு வரும்.
புதிய கலப்பினம் / இனம் தோற்றுவிக்கும் நோக்கில் இனச் சேர்க்கை செய்தல்.
நமது நாட்டு வெள்ளாடுகள் சிறியவை. பால் உற்பத்தி திறன் குறைந்தவை. வளர்ச்சி வீதமும் குறைவானவை. ஆனால் விரைவில் பருவம் எய்தி, ஆண்டுக்கு இருமுறை ஈனக் கூடியவை. இக்குண நலன்கள் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை.
வெளிநாட்டினங்கள், பெரியவை. பால் உற்பத்தித் திறன் உள்ளவை. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறைதான் குட்டி போடும். மேலும் குட்டி போட்ட 6 – 7 மாதம் கழிந்த பெட்டை ஆடுகள் முதல் முறையாக சினைப் பருவத்திற்கு வரும். ஆகவே ஆண்டு முழுவதும் சினைக்கு வந்து இருமுறை குட்டி போடும் நமது நாட்டினத்தின் குணமும். குட்டி போட்ட இரண்டு மாதத்தில் சினைக்குவரும் தன்மையும் காப்பாற்றப்பட்ட வேண்டும். அதே வேளையில், பெரிய உடலமைப்பும், பால் அதிகம் கொடுக்கும் குண நலனும், நமது நாட்டின் ஆட்டில் இணைக்கப்படும்படி ஒரு கலப்பினம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
பொதுவாக நம் தமிழ்நாட்டிலுள்ள கொடி ஆடுகளுடன் சமுனா பாரி மற்றும் ஆங்கிலோறுபியன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
பள்ளை ஆடுகள் மற்றும் பல குட்டிகள் ஈனும் நாட்டு ஆடுகளுடன் தலைச்சேரி மற்றும் சானன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
மாட்டினத்தில் கலப்பின உற்பத்தி செய்வது போல 50% – 75% மற்றும் 62.5% கலப்பின உற்பத்தி செய்து, நமக்கு ஏற்ற குணங்கள் அதில் இருக்கும்படி தீவிரமாகத் தேர்வு மேற்கொண்டு தொடர்ந்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆர்வம் உள்ள தனிப் பண்ணையாளர் இவ்வகையில் பல தலைமுறையில் இனச்சேர்க்கை செய்து, ஒரு புது இனம் உண்டாக்கி விட முடியும்.
புது இனம் தோற்றுவிக்கும்போது, கடுமையாகத் தேர்வு செய்தும், தகுதியற்றனவற்றைக் கழித்தும், இனப் பெருக்கம் செய்ய வேண்டும்.
கீழ்க்காணும் குணநலன்கள் தேர்வின் போது கவனிக்கப்படல் வேண்டும்.
  1. தினசரி / மாதாந்திர எடை கூடும் அளவு
  2. அதிக பால் கொடுக்கும் திறனுடன் நன்கு குட்டிகளைக் காக்கும் குணமுடைய தன்மை
  3. குட்டி போட்ட ஆடுகள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்குள் சினைப் பருவத்திற்கு வருவது
  4. பல குட்டிகள் போடும் தன்மை போன்றவை.

Wednesday, July 4, 2012

ஆடுகளை தேர்வு செய்தல்



ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க வேண்டும். கிடாக்கள் திடகாத்திரமாகவும், பெட்டை ஆடுகளை சினைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பண்ணையில் கிடா ஆடுகள்தான் முக்கியமானதாகும்.
தீவனம் : ஆடுகளை மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வளர்த்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் புற்கள் அதிகம் இருப்பதால் மற்ற காலங்களில் ஆடுகள் வளமாக இருக்காது. எனவே ஆடு வளர்ப்போர் தேவையான தீவனப்புற்கள் மற்றும் வேலி மசால் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்து ஆடுகளுக்கு கொடுக்கலாம். ஆடுகளை தினமும் ஒரே இடத்தில் மேய்க்காமல் வேறு வேறு இடங்களில் மேய்க்க வேண்டும். கோடைகாலங்களில் சுமார் 10 மணிநேரங்களாவது மேய்க்க வேண்டும். மேலும் அவைகளுக்கு அடர்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும். வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. தீவனம் சுத்தமாகவும், புதியதாகவும் இருப்பதை விரும்பும். விதவிதமான மர இலைகள், செடிகள், மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை உண்ணும். ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் (புற்கள் மற்றும் மரத்தழைகள்) கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது கோ-1, கோ-3, கினியா புற்களை கொடுக்கலாம். மேலும் மரதழைகளான வேலிமசால், சூபாபுல், அகத்தி, கிளரிசிடியா, கொடுக்காபுளி, வேப்பமரஇலை, ஆலமரம், கருவேலமரம், பூவரசு, காட்டுவாகை, பலாமரம் இலை முதலியவைகளை கொடுக்கலாம். அடர்தீவனமும் ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
அதாவது குட்டிகளுக்கு 50 கிராம், வளரும் ஆடுகளுக்கு 100 கிராம், பெரிய ஆடுகளுக்கு 200 கிராம் என்ற அளவில் தினமும் கொடுக்க வேண்டும். குட்டிகள் பிறந்த 20 நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக புற்களை கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அடர்தீவனத்துடன் பயிறு வகைப் புற்கள் அதாவது ஸ்டைலோ, வேலிமசால் போன்றவற்றை தீவனமாகக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.