Tuesday, August 16, 2011

புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்


வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
  1. கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும். பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள். தற்போது கோ-2 ரக புல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 33% அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.சாகுபடிக் குறிப்புகள்
    எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும். 150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம். மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
    நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
    இப்புல்லுக்கு இடையே ஊடுபயிராக மொச்சையினச் செடிகளையும் பயிரிடலாம்.

  2. கினிபுல் – அமில்வகை (Guinea Grass – Hamil)இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம். எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.

  3. எருமைப்புல் (Para Grass)இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும். உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
    முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.
மொச்சையினப் பயிர்கள்
  1. குதிரை மசால் (Lucerne)இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம்.
    வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.
    70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.

  2. ஸ்டைலோ (Stylosanthes)இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
    முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
    ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.

  3. வேலிமசால் (Hedge Lucerne)இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும்.
    இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
    இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
    இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
    ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.
வெள்ளாடுகளுக்கென்றே உள்ள சிறந்த தீவன மரங்களாவன:
  1. கொடுக்காய்புளி
  2. கருவேல்
  3. வெள்வேல்
  4. உடை (குடைவேல்)
  5. கிளுவை
கொடுக்காய்புளி மரப் பழங்களைப் பலர் விரும்பி உண்பார்கள். அதன் தழைகளில் முள் இருந்தாலும், வெள்ளாடுகள் விரும்பி, ஏன் முள்ளையும் சேர்த்தே உண்டுவிடும்.
கருவேல், வெள்வேல், குடைவேல் முதலான மரங்கள் விறகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதன் தழையையும், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அத்துடன் இம்மர நெற்றுகள் ஆடுகளுக்குச் சிறந்த தீவனமாகும். பலர் இந்நெற்றுகளைச் சேமித்துத் தீவனப் பற்றாக்குறைக் காலங்களில், ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். இதில் புரதம் நிறைய உள்ளது. சீமைக் கருவேல் நெற்றுத் தீவனமாகும்.
மேலும் கிளுவை மரங்களை வேலிகளில் வளர்ப்பார்கள். இதன் தழையையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகள் அவை வளர்க்கப்படும் பகுதியில் உள்ள பல்வகைத் தழைகளை உண்ணப் பழகிக் கொள்ளும். உதாரணமாகச் சவுக்குப் பயிரிடப்படும் பகுதியில் சவுக்குத் தழையை உண்ணும். மைகொன்னை எனப்படும் மரத்தழையையும், சில வெள்ளாடுகள் உண்கின்றன.

Wednesday, August 3, 2011

வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப்பு முறைகள்


வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப்பு முறைகள்
திட்டமிட்டு வெள்ளாடு வளர்க்கத் தொடங்குபவருக்கு, விலங்கினங்கள் மீது ஒரு பாசமும், ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஓர் அடிப்படைத் தேவை எனலாம். வெள்ளாடுகள் நம்மைப்போல் உயிருள்ளவை. ஆகவே, அவற்றின் மீது அக்கறை காட்டினால்தான் அவை சிறக்கும். அதக் காரணமாக அதிக வருவாய் பெற முடியும். அடுத்து, அதிக அளவில் நல்ல முறையில் வெள்ளாடு வளர்ப்பவருக்குத் தேவையான நிலமும், முதலீடும் தேவை. அடுத்தபடியாக ஓரளவு வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக ஆடுகள் விற்பது எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம்.
எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம். இது குறித்து இனச்சேர்க்கை என்னும் பகுதியில் விரிவாக விவாதிக்கலாம்.
வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
  1. இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.
    3 மாத வயது வரை — பால் பல்
    1 1/2 வயது வரை — 2 பல்
    2 வயது வரை — 4 பல்
    3 வயது வரை — 6 பல்
    4 வயது வரை — 8 பல்
    வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு.
    இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.
  2. ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.
  3. பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.
  4. போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
  5. மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.
  6. சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.
  7. முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.
புதிதாக வாங்கிய வெள்ளாடுகளை உடனடியாக மற்ற ஆடுகளுடன் சேர்க்கக் கூடாது. ஆடுகளை ஒதுக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் உடலில் உள்ள உண்ணி, பேன், தெள்ளுப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். பிறகு, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவையாவும் முடிந்த பின்பே பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்க வேண்டும்.
வெள்ளாடு வளர்ப்பு முறைகள் குறித்து எழுதுமுன் வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது.
  1. வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.
  2. வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.
  3. செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.
  4. செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.
  5. வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.
  6. வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.
  7. செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.